ஓடும் ரெயிலில் இருந்து தவறிவிழுந்த வாலிபர் 6 மணி நேரம் ரத்த காயத்துடன் துடிதுடித்த பரிதாபம்    link
ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து காயம் அடைந்த வாலிபரை ஆஸ்பத்திரியில் சேர்க்க யாரும் உதவாததால், அவர் சாலையோரத்தில் 6 மணி நேரம் ரத்த காயத்துடன் துடிதுடித்தார்.

தவறி விழுந்த வாலிபர்

மும்பை தாராவி 90 அடி சாலை பகுதியை சேர்ந்தவர் மகேஷ்(வயது28). நேற்று காலை 9 மணியளவில் துறைமுக வழித்தடத்தில் செல்லும் மின்சார ரெயிலில் வாயில் பகுதியில் நின்று பயணம் செய்தார்.அவர் திடீரென ஓடும் ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. தன்னை யாரும் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லாததால், தாங்க முடியாத வலியுடன் சயான் மருத்துவமனை நோக்கி நடக்க தொடங்கினார்.

அப்போது, தலையில் இருந்து உடல் முழுவதும் ரத்தம் வழிந்தோடியதால் நடக்க முடியாமல் சயான் கவுரிதத் பள்ளி அருகே உள்ள சாலையோர நடைபாதையில் சுருண்டு விழுந்தார்.

6 மணி நேரம் துடித்தார்

அந்த வழியாக சென்ற பொதுமக்களிடம் தன்னை மருத்துவமனையில் சேர்க்கும்படி மகேஷ் கெஞ்சினார். ஆனால் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல யாரும் முன்வரவில்லை. சுமார் 6 மணி நேரமாக அவர் அங்கேயே ரத்தம் வழிந்த நிலையில் துடித்துக்கொண்டிருந்தார். மாலை 3 மணியளவில் சயானில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் வினய் நாயர்(23) என்ற மாணவர் இந்த பரிதாப காட்சியை கண்டார். அவர் உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். மேலும் மகேஷின் தலையில் இருந்து வெளியேறும் ரத்தத்தை தடுப்பதற்காக தனது கைக்குட்டையால் கட்டுப்போட்டார்.

இந்த நிலையில் போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் அந்த வாலிபரை சயான் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மகேஷ் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து சயான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Comments

Popular Posts